கரூர் மாவட்டம், குளித்தலைக்கு கிழக்கே உள்ள ஒரு குக்கிராமம் மேட்டுமருதூர். இவ்வூரின் வடகிழக்கு திசையில் வயல்வெளி அருகே ஒரு பழங்காலச் சிவன் கோயில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோயிலின் எதிரே நந்தியம் பெருமான் மூலவரைப் பார்த்தவாறு அமைந்துள்ளார். இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலின் மூலவர் ஆராவமுதீஸ்வரர் எனப்படுகிறார். கிழக்கு பார்த்து அமையப் பெற்ற இக்கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டு விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
திருக்கோவில் அமைப்புஇக்கோவில் பல்லவர்கள் காலத்திலிருந்து வழிபாட்டில் இருந்து வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (பிரம்மா, விநாயகர், ஜேஸ்ட்டா தேவி என்ற மூத்ததேவி ஆகியோரின் உருவம் பல்லவர் பாணியில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது, மேலும் கி.பி 580 முதல் கி.பி. 630 முடிய பல்லவ பேரரசின் பேரரசர் முதலாம் மஹேந்திரவர்மன் காலத்தில் இப்பகுதி பல்லவ பேரரசுடன் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது). பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு இக்கோயில் சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளதென வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கோவில் கட்டுமானம்
கோவில்கருவறை,
அர்த்த மண்டபம் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. தரைமட்டத்தில் இருந்து கருவறையும் முன்மண்டபமும்
மூன்றரை அடி உயரத்தில் உள்ளது. அர்த்த மண்டப படிகள் தற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அர்த்த மண்டபம் நான்கு விஷ்ணுகாந்த
தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. விஷ்ணுகாந்த தூண்கள் கலசம், தாடி, கும்பம், பாளி பலகை
போன்ற பகுதிகளுடன் காணப்படுகிறது. இதன் போதிகைகள் தரங்கப் போதிகை வகையைச் சார்ந்தது.
நான்கு விஷ்ணுகாந்த தூண்களில் (எட்டு பட்டைகள் கொண்டவை) மூன்று மட்டுமே கோவிலின் உள்ளேயுள்ளது.
தேவகோட்டங்களில் கடவுள் சிற்பங்கள் ஏதும் இல்லை. கூரைப்பகுதி கபோதக அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கபோதத்தில் நாசிக்கூடுகளும், அதில் இறை, கந்தர்வ உருவங்களும் செதுக்கப்பட்டு, ஓரங்களில் கருக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூரையின் உறுப்பான வலபியில் பூதகணங்கள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன. பூதகணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான சேட்டைகள் செய்வது போல இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அர்த்த மண்டப வாயிலின் மேற்பகுதியில் உள்ள வலபியில் பூதகணங்களுக்கு இடைய விநாயகர் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது.
அர்த்த மண்டபத்தைக் காட்டிலும் சதுரமான கருவறை சுற்றளவில் பெரிதாக உள்ளது. கி.பி. (பொ.ஆ.பி.) 10 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மேற்காண் அமைப்புடன் அளவில் சிறியவனவாகவே இருந்தன, அதற்கு இக்கோயில் ஒரு எடுத்துக்காட்டு.
இக்கோயிலில் அம்பாளுக்கென தனி சந்நிதி இல்லை. அம்பாளுக்கு தனி சந்நிதி அமைக்கும் வழக்கம் முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்துதான் ஏற்பட்டுள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜனின் 11 வது ஆட்சியாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டதாக இருக்கக் கூடும் என வராலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
விமானம்
இரண்டு தளங்களை (துவிதள விமானம்) உடையதாக உள்ளது. விமானம் செங்கற்கால் கட்டப்பட்டு
சுதை வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துவிட்டன,
இதனால் விமானத்தின் அமைப்பை தெளிவாக அறிந்து கொள்ள இயலவில்லை. விமானத்தின் உள் பகுதி கதலிகாகர்னம் என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கதலிகாகர்னம் என்பது வாழைப்பழத் தாரை தலைகீழாக
கவிழ்ந்த நிலையில் (வெற்றிடக் கூம்பு) உள்ளதைப் போல் அமைக்கப்பெறும் அமைப்பாகும்.
கதலிகாகர்னம் அமைப்பில் கீழ்பகுதிச் சுவரின் கணம் அதிகமாகி விமானத்தின் உச்சிப்
பகுதி நோக்கிப் போகப் போக அகலத்தைக் குறைத்து உட்பக்கம் கூரையேதும் இல்லாமல் வெற்றிடமாக அமைக்கப்படும்
அமைப்பாகும். கதலிகாகர்ன விமானமாக இருப்பதால், விமானத்தின் மொத்த எடையும் கருவரையின்
சுவர்ப்பகுதியில் பகிரப்படுவதால், விமானத்தின் வெளிப்பகுதி சிதைவடைந்திருந்தாலும்
இன்று வரை இடிபாடுகளுக்கு உள்ளாகாமல் இருக்கிறது.
சித்திரை மாதத்தின் முதல் நாளில் காலை சூரிய உதயத்தின் போது இத்தல மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது என்பது ஒரு சிறப்பு. ஆகவே, இத்தலத்தில் அன்று ஒரு நாள் மட்டும் பாஸ்கர பூஜை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுத் தகவல்கள் :
மேலும் வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம் ஒன்று வயல்வெளியிலிருந்து மீட்டெடுத்து தற்போது அர்த்தமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலத்திய தொன்மை வாய்ந்த சிற்பங்களாக வளமையின் சின்னமாகக் கருதப்படும் ஜேஸ்ட்டாதேவி எனப்படும் மூத்ததேவியின் சிற்பம் மாந்தன் மற்றும் மாந்தியுடன் காண முடிகிறது. இச்சிலையில் மாந்தனின் கைகளில் உள்ள தண்டம் போன்ற அமைப்பின் மீது காகம் அமர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இச் சிலையுடன் பிரம்மா, சிவபெருமான், விநாயகர் ஆகிய இறை உருவ சிற்பங்களையும் இங்கு கோயயிலுக்கு வெளியே இருப்பதைப் பார்க்க முடிகிறது.
கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளையும், கட்டிட அமைப்பையும் முதலாம் இராஜராஜனின் மேன்மையை பறை சாற்றும் மற்றொரு ஆவணமாகக் கருதலாம்.
கோயில் அமைவிடம் Google Map Link: https://maps.app.goo.gl/e5aw5F72cNwDtffNA
கோயில் அர்ச்சகர் தொடர்பு எண்: திரு சிவ தத்புருஷ. ப. அமர்நாத் +917010505011
கோவில் குறித்த அனைத்து வரலாறும் புகைப்படமும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
ReplyDelete