Thursday, 24 April 2025

எறிபத்த நாயனார்

எறிபத்த நாயனார் கரூர் என்று அழைக்கப்படுகின்ற கருவூரில் பிறந்தவர். சிறந்த சிவபக்தர். ஆனிலைப் பெருமானை வழிபடுகின்ற சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டவர். சிவனடியார் வழிபாட்டில் எவர் கெடுதல் செய்தாலும், அவர்களது வழிபாட்டிற்குத் துன்பம் விளைவித்தாலும் அவர்களை மழுவாயுதத்தால் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு தீவிர பக்தி கொண்டிருந்தார்.

அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் தினந் தோறும் நந்தவனத்திற்குச் சென்று மலர் கொய்து மாலை கட்டி ஆனிலைப் பெருமானுக்குச் சாத்தி வந்தார்.

மகாநவமிக் கொண்டாட்டங்களுக்கு முந்தைய நாள் காலை அவர் மலர் பறித்துக் கூடையில் நிரப்பி அக் கூடையைக் கோலில் தொங்கவிட்டு வீதியில் வந்தார். அப்போது புகழ்ச்சோழ மன்னனது பட்டத்து யானை ஆற்றில் நீராடிவிட்டு அவ்வழியே வந்தது. சிவகாமியாண்டாருடைய பூக்கூடையைப் பறித்துக் கீழே சிதறிவிட்டுச் சென்றது. யானைப் பாகரும் யானையை கட்டுப்படுத்த இயலாது, யானையை வேகமாக நடத்திச் சென்றார். சிவகாமியாண்டார் ஒன்றும் செய்ய இயலாதவராய்ப் பெருமானை “சிவதா சிவதா” என்று முறையிட்டார். அடியார்க்கு நேர்ந்த  துன்பங்களைக் கேட்டாறிந்த எறிபத்தர் அதிவேகமாகச் சென்று யானையின் துதிக்கையை தனது மழுவால் வெட்டினர். யானை அலறிக்கொண்டு கீழே விழுந்து மாய்ந்தது. யானையைக் கட்டுப்படுத்தாத பாகர்களையும் மழுவால் தாக்கிக் கொன்றார்.

இச் செய்தியைப் புகழ்ச்சோழர் கேள்வியுற்றார். மிருந்த கோபங்கொண்டார். உடனே குதிரையில் ஏறிச் சேனைகளுடன் புறப்பட்டு யானை இறந்த இடத்திற்கு சென்றுஅங்கு மழுவுடன் நின்றுகொண்டிருந்த சிவனடியாரான எறிபத்தரைக் கண்டார். மன்னர் ஆச்சரியப்பட்டு, "அன்பின் வடிவமான பக்தர்கள் எரிச்சலடைந்திறார் என்றால், இதற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும் எனக் கருதி, அவர் தனது குதிரையிலிருந்து இறங்கி, எறிபத்தரை வணங்கி, "யானையும் காவலர்களும் செய்த குற்றம் என்ன“ என்று வினவினார்.

யானை செய்த தீங்கையும், பாகர் அகைத் தடுக்காமல் இருந்த பிழையையும் தெரிவித்து, தாம் அவர்களை கொன்ற காரணத்தையும் எறிபத்தர் விளக்கினார். புகழ்ச்சோழர் இதைக் கேட்டு அடியார்க்குத் தீங்கு செய்த யானைபையும், பாகரையும் கொன்றது போதாது, என்னையும் கொல்லவேண்டும் என்று சொல்லித் தம் உடைவாளை எடுத்து எறிபத்தரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்குவதற்குச் சிறிது தயங்கி, வாங்காவிடில் மாய்த்துக்கொள்வார் என்று அஞ்சி வாலை வாங்கினார். பிறகு எறிபத்தர் புகழ்ச்சோழருடைய அடியார்கள் மீதான பக்தியைக் கண்டு வியந்து, இந்த வாளால் தாமே மாய்த்துக் கொள்ளவதுதான் சரி என நினைத்து, தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்போது புகழ்ச் சோழர் அவரைத் தடுத்து நின்றார்.

அப்பொழுது இருவரும் கேட்கும்படி “ உங்கள் மெய்யன்பை உலகம் அறிந்து கொள்ளவே இத்நிகழ்ச்சி ஏற்பட்டது" என ஓர் ஆசரீரி வாக்கு வானில் அதைக் கேட்டு இருவரும் ஒருவரை வணங்கினர்.

அதன் பிறகு எறிபத்தர் சிலகாலங்கள் வாழ்ந்து சிவபதம் அடைந்தார். எறிபத்த நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

பூக்குடலை விழா:

இந்நிகழ்ச்சியின் நினைவாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மகா அஷ்டமியன்று, பக்தர்கள் பூக்குடலை ஏந்தி, பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறபபாடு ஆகி, மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, இறைவனுக்கு பூக்களை சமர்பித்து வழிபட்டு வருகிறார்கள்.

 

Tuesday, 22 April 2025

ஆராவமுதீஸ்வரர் ஆலயம். (நாகபன்னேஸ்வரத்து மஹாதேவர் ஆலயம்), மேட்டுமருதூர் [METTUMARUDHUR], குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.

 

கரூர் மாவட்டம், குளித்தலைக்கு கிழக்கே உள்ள ஒரு குக்கிராமம் மேட்டுமருதூர். இவ்வூரின் வடகிழக்கு திசையில் வயல்வெளி அருகே ஒரு பழங்காலச் சிவன் கோயில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோயிலின் எதிரே நந்தியம் பெருமான் மூலவரைப் பார்த்தவாறு அமைந்துள்ளார். இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலின் மூலவர் ஆராவமுதீஸ்வரர் எனப்படுகிறார். கிழக்கு பார்த்து அமையப் பெற்ற இக்கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டு விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

திருக்கோவில் அமைப்பு

இக்கோவில் பல்லவர்கள் காலத்திலிருந்து வழிபாட்டில் இருந்து வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (பிரம்மா, விநாயகர், ஜேஸ்ட்டா தேவி என்ற மூத்ததேவி ஆகியோரின் உருவம்  பல்லவர் பாணியில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது, மேலும் கி.பி 580 முதல் கி.பி. 630 முடிய பல்லவ பேரரசின் பேரரசர் முதலாம் மஹேந்திரவர்மன் காலத்தில் இப்பகுதி பல்லவ பேரரசுடன் இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது).  பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு இக்கோயில் சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளதென வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கோவில் கட்டுமானம்

கோவில்கருவறை, அர்த்த மண்டபம் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. தரைமட்டத்தில் இருந்து கருவறையும் முன்மண்டபமும் மூன்றரை அடி உயரத்தில் உள்ளது. அர்த்த மண்டப படிகள் தற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அர்த்த மண்டபம் நான்கு விஷ்ணுகாந்த தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. விஷ்ணுகாந்த தூண்கள் கலசம், தாடி, கும்பம், பாளி பலகை போன்ற பகுதிகளுடன் காணப்படுகிறது. இதன் போதிகைகள் தரங்கப் போதிகை வகையைச் சார்ந்தது. நான்கு விஷ்ணுகாந்த தூண்களில் (எட்டு பட்டைகள் கொண்டவை) மூன்று மட்டுமே கோவிலின் உள்ளேயுள்ளது.

கோயிலானது, அடித்தளம் முதல் கூரைப்பகுதி வரை கருங்கற்களால் கட்டப்பட்டு கல்ஹாரமாக உள்ளது. அதிட்டானம் (அடித்தளம்) பாதபந்த அதிட்டான  வகையைச் சார்ந்தது. கோயிலின் கால் எனப்படும் சுவர் பகுதியை பிரம்மகாந்த தூண்கள் (நான்கு பட்டைகள் கொண்டவை) கலசம், கும்பம், பலகை என்ற அமைப்புகளுடன் சுவரை தாங்கி நிற்கின்றன.  தேவகோட்டமும், கடைசி மூலையில் வருகின்ற கர்ணப்பத்தியும் சுவரின் பக்கவாட்டு மட்டத்தில் இருந்து கொஞ்சம் வெளிப்பக்கம் இழுத்ததுபோல் உள்ளன.

தேவகோட்டங்களில் கடவுள் சிற்பங்கள் ஏதும் இல்லை. கூரைப்பகுதி கபோதக அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கபோதத்தில் நாசிக்கூடுகளும், அதில் இறை, கந்தர்வ உருவங்களும் செதுக்கப்பட்டு, ஓரங்களில் கருக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூரையின் உறுப்பான வலபியில் பூதகணங்கள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன. பூதகணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான சேட்டைகள் செய்வது போல இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அர்த்த மண்டப வாயிலின் மேற்பகுதியில் உள்ள வலபியில் பூதகணங்களுக்கு இடைய விநாயகர் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. 


அர்த்த மண்டபத்தைக் காட்டிலும் சதுரமான கருவறை சுற்றளவில்  பெரிதாக உள்ளது. கி.பி. (பொ.ஆ.பி.) 10 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மேற்காண் அமைப்புடன் அளவில் சிறியவனவாகவே இருந்தன, அதற்கு இக்கோயில் ஒரு எடுத்துக்காட்டு. 

இக்கோயிலில் அம்பாளுக்கென தனி சந்நிதி இல்லை. அம்பாளுக்கு தனி சந்நிதி அமைக்கும் வழக்கம் முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்துதான் ஏற்பட்டுள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜனின் 11 வது ஆட்சியாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டதாக இருக்கக் கூடும் என  வராலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

விமானம் இரண்டு தளங்களை (துவிதள விமானம்) உடையதாக உள்ளது. விமானம் செங்கற்கால் கட்டப்பட்டு சுதை வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துவிட்டன, இதனால் விமானத்தின் அமைப்பை தெளிவாக அறிந்து கொள்ள இயலவில்லை. விமானத்தின் உள் பகுதி     கதலிகாகர்னம்‌     என்ற  அமைப்பில்‌ உருவாக்கப்பட்டுள்ளது. கதலிகாகர்னம்‌ என்பது வாழைப்பழத் தாரை தலைகீழாக கவிழ்ந்த நிலையில் (வெற்றிடக் கூம்பு) உள்ளதைப்‌ போல்‌ அமைக்கப்பெறும்‌ அமைப்பாகும்‌. கதலிகாகர்னம் அமைப்பில் கீழ்பகுதிச் சுவரின் கணம்‌ அதிகமாகி விமானத்தின்‌ உச்சிப் பகுதி நோக்கிப் போகப் போக அகலத்தைக்‌ குறைத்து உட்பக்கம்‌ கூரையேதும்‌ இல்லாமல்‌ வெற்றிடமாக அமைக்கப்படும் அமைப்பாகும். கதலிகாகர்ன விமானமாக இருப்பதால், விமானத்தின்‌ மொத்த எடையும்‌ கருவரையின் சுவர்ப்பகுதியில்‌ பகிரப்படுவதால், விமானத்தின் வெளிப்பகுதி சிதைவடைந்திருந்தாலும் இன்று வரை இடிபாடுகளுக்கு உள்ளாகாமல் இருக்கிறது.

12.5 அடி கல்ஹாரத்தின் மேலே 23.5 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறது, கோயிலின் மொத்த உயரம் 36 அடிகள். இதில் சிறப்பு என்ன தெரியுமா? அந்த செங்கல் விமானம் சோழர் காலத்தியது. 1000 வருடங்களைக் கடந்து வந்துள்ள இந்தக் கோயிலில் எந்த மாற்றமும் இந்த இடைப்பட்ட 1000 ஆண்டுகளாக செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் அந்த சோழ தேசத்து மக்கள் கண்ட அதே கோயிலை நாமும் கண்டுகொண்டிருக்கிறோமா! 

சித்திரை மாதத்தின் முதல் நாளில் காலை சூரிய உதயத்தின் போது இத்தல மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது என்பது ஒரு சிறப்பு. ஆகவே, இத்தலத்தில் அன்று ஒரு நாள் மட்டும் பாஸ்கர பூஜை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுத் தகவல்கள் :


இராஜராஜசோழன் காலத்தைச் சார்ந்த 21 வரிகள் கொண்ட கல்வெட்டுகள் அர்த்த மண்டப நுழைவாயிலில் உள்ள தென்புறம் உள்ள கல் நிலைகாலில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் முதல் பத்து வரிகளில் “ஸ்வஸ்தி ஸ்ரீ சாலை கலமறுத்த கோவி இராஜராஜகேசரி பந்மக்கு யாண்டு யக 11 ஆவது மீய் கோட்டு நாட்டு மாதான மருதூர் ஆராவதீஸ்வரத் தேவர்கக்கு இவ்வூர்“ என்று உள்ளது. இக்கல்வெட்டு இராஜராஜ சோழரின் 11 வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் சாலை கலமறுத்த கோவி இராஜராஜகேசரி என்பது கேரளத்தின் விளிஞ்சம் கோட்டை மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காந்தளுர் சாலையில் நடைபெற்ற போரில் முதலாம் இராஜராஜ சோழனால்  பெற்ற வெற்றியை விளக்கும் மெய்கீர்த்தியாகக் கொள்ளலாம். மேலும், இக்கல்வெட்டின் வாயிலாக 10 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் மீய்கோட்டு நாட்டு மாதான மருதூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள இறைவன் ஆராவமுதீஸ்வரர் (தெவிட்டாத அமுதம் தருபவர் என்று பொருள்) என்று அழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் இக்கல்வெட்டு சூரியகிரகணத்தன்று நுந்தா விளக்கு எரிக்க நிலம் இக்கோவிலுக்கு கொடையாக அளிக்கப்பட்ட செய்தியையும் தெரிவிக்கிறது.
கோயிலின் தென்மேற்கு மூலையில் இரு கல்வெட்டுகளும், கருவறையின் குமுத வரிகளில் பொறிந்த நிலையில் சில கல்வெட்டுகளும்  உள்ளன. 
மேலும், அர்த்த மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் குமுத வரிகளுக்கு மேலே நீண்ட ஒருகல்லின் நிறம் சற்று வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்தக்கல், கோயிலின் மற்ற கற்களிலிருந்து மாறுபட்ட வண்ணத்தையும், உறுதித் தன்மையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு கூறும் செய்தி “மாதேஸ்வர ரக்ஷை தேவ ரிச.... ராகித கந்தி தேவா“ என்பதேயாகும். பொதுவாக இத்தகைய கல்வெட்டுகள் ஒரு குறிப்பிட்ட செயலை அதாவது, இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தம் அல்லது தானம் போன்றவற்றை குறிப்பிட்ட பிறகு அச்செய்திக்கு கடைசியாக இணைக்கப்படும் வரிகாளாகும், இக்கல்வெட்டுக்கு முந்தைய கல்வெட்டுகள் இக்கோயிலின் சுவரில் கண்டறிய இயலவில்லை, ஒரு வேளை சிதைவுற்றிருக்கலாம்.

ஆறரை அடிச் சுற்றளவு கொண்ட வட்ட வடிவ ஆவுடையாரில், ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கமாக மூலவர் பெரிய அளவில் உள்ளார். கோயிலுக்கு எதிரே பல்வர்கால நந்தியம்பெருமான் சிவனைப் பார்த்தவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளார். கோமுகம் வடக்குதிசை நோக்கியவாறு உள்ளது.

மேலும் வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம் ஒன்று வயல்வெளியிலிருந்து மீட்டெடுத்து தற்போது அர்த்தமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.


பல்லவர் காலத்திய தொன்மை வாய்ந்த சிற்பங்களாக வளமையின் சின்னமாகக் கருதப்படும் ஜேஸ்ட்டாதேவி எனப்படும் மூத்ததேவியின் சிற்பம் மாந்தன் மற்றும் மாந்தியுடன் காண முடிகிறது. இச்சிலையில் மாந்தனின் கைகளில் உள்ள தண்டம் போன்ற அமைப்பின் மீது காகம் அமர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இச் சிலையுடன் பிரம்மா, சிவபெருமான், விநாயகர் ஆகிய இறை உருவ சிற்பங்களையும் இங்கு கோயயிலுக்கு வெளியே இருப்பதைப் பார்க்க முடிகிறது.





கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளையும், கட்டிட அமைப்பையும் முதலாம் இராஜராஜனின் மேன்மையை பறை சாற்றும் மற்றொரு ஆவணமாகக் கருதலாம்.

கோயில் அமைவிடம் Google Map Link: https://maps.app.goo.gl/e5aw5F72cNwDtffNA 

கோயில் அர்ச்சகர் தொடர்பு எண்: திரு சிவ தத்புருஷ. ப. அமர்நாத் +917010505011

External Link for Inscription: https://surl.li/wyrjdw